Published : 30 Nov 2017 04:26 PM
Last Updated : 30 Nov 2017 04:26 PM

இருளில் மூழ்கிய குமரி மாவட்டம்: 950 மின்கம்பங்கள் சாய்ந்தன

ஓகி புயலின் காரணமாக வியாழக்கிழமை அதிகாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதில் மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 950 மின்கம்பங்கள் முறிந்தன. இதனால் குமரி மாவட்டம் முழுவதும் இருளில் மூழ்கிப் போயுள்ளன.

 கன்னியாகுமரி அருகே கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருந்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யத் துவங்கியது.

சூறைக்காற்றுடன் தொடர்ச்சியாகப் பெய்த கனமழையினால் பல இடங்களிலும் மின் வயர்கள் துண்டாகின. பல இடங்களிலும் மின் கம்பங்கள் விழுந்தன. இதனால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. தொடர் மழை, சூறாவளியின் காரணமாக ஒட்டுமொத்த கன்னியாகுமரி மாவட்டத்திலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் புதன் கிழமை நள்ளிரவு முதலே ஒட்டுமொத்த குமரி மாவட்டமும் இருளில் மூழ்கின.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தி இந்துவிடம் கூறுகையில், ''தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த சாலையோர மரங்கள் அகற்றப்பட்டு விட்டன. குமரி மாவட்டத்தில் மொத்தம் 950 மின் கம்பங்கள் மழை, காற்றினால் முறிந்து விழுந்து சேதம் ஆகியுள்ளன. இதனை சீர் செய்ய வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மின் வாரிய அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அவர்களும் வந்துள்ளனர். இது போக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரிகளும் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x