பழநியில் உணவகங்கள், கடைகளில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுக்கும் வணிகர்கள்

பழநியில் உணவகங்கள், கடைகளில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுக்கும் வணிகர்கள்

Published on

பழநி: பழநியில் பத்து ரூபாய் நாணயங்களை வணிகர்கள் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

பழநியில் உள்ள உணவகங்கள், மளிகை, காய்கறி கடைகளில் பொருட்களை வாங்கிய பின் பத்து ரூபாய் நாணயங்களை கொடுத்தால் அதனை வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தியில் இருந்து இன்னும் விழிப்புணர்வு பெறாததே இதற்கு காரணம்.

கடைகள் மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கி பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுக்கக் கூடாது எனக் கூறியும், வணிகர்கள் பலர் நாணயங்களை வாங்க தயங்குகின்றனர். இதனால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in