Published : 06 Nov 2017 08:58 AM
Last Updated : 06 Nov 2017 08:58 AM

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி: நற்பணி இயக்க விழாவில் கமல்ஹாசன் திட்டவட்டம்; புதிய செல்போன் செயலி நாளை அறிமுகம்

அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. அதற்கான முதல் பணியாக ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையிலான செல்போன் செயலி நாளை அறிமுகம் செய்யப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் 7-ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கமல் பிறந்த நாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டு விழா சென்னை கேளம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ரசிகர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:

இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாது. பேரழிவு வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டுமா? வருமுன் காக்கும் நிலை வரவேண்டும். சரித்திரத்தை திரும்பிப் பார்க்காமல், செய்த தவறையே நாம் திரும்பத் திரும்பச் செய்கிறோம்.

கடந்த 37 ஆண்டு உழைப்பு பஞ்சுமிட்டாய்போல காணாமல் போனதாக உணர்கிறேன். ரசிகர்களின் உற்சாகத்தை மடைமாற்றம் செய்திருக்கிறேன். பணக்காரர்கள் முறையாக வரி செலுத்தினாலே, நாடு ஓரளவு சரியாகிவிடும்.

தமிழக நலன்களுக்காக என் ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். இந்தக் கூட்டம் மன்னர் முன் கையேந்தும் கூட்டமில்லை. தமிழகத்துக்காக கையேந்துவதில் வெட்கமில்லை என்று கருதுகிறேன். இதையெல்லாம் நான் பதவிக்காக செய்வதாக நினைக்காதீர்கள். நான் பதவிக்காக பிரச்சினைகள் பற்றிப் பேசவில்லை. பதவிக்காக அரசியலைக் கையில் எடுக்கவில்லை. என் குடும்பத்திலும் பல இந்துக்கள் உள்ளனர்.

நான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. அதற்கான முதல் பணியாக, ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செல்போன் செயலி (App) நவம்பர் 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும். கட்சி தொடங்க பணம் தேவை என்கின்றனர். அதற்கான பணத்தை ரசிகர்கள் தந்துவிடுவர் என்பதால், பயம் இல்லை. அரசியல் கட்சி தொடங்குவதை அமைதியாகத்தான் செய்ய முடியும். வரும் 7-ம் தேதி என் பிறந்தநாள் கொண்டாடத் தேவையில்லை. அது கேக் வெட்டும் நேரம் அல்ல. கால்வாய் வெட்ட வேண்டிய நேரம்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். விழாவில், நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x