Published : 02 Aug 2023 03:22 PM
Last Updated : 02 Aug 2023 03:22 PM

எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய நிறுவனங்களின் மனு தள்ளுபடி

எஸ்.பி.வேலுமணி | கோப்புப்படம்

சென்னை:முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில், தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில், டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.பொன்னி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கைவிடுவது என அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றம்சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய எம்.எஸ். கன்ஸ்ட்ரக்சன் இன்ஃப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு, ஆலயம் ஃபவுண்டேஷன், வைதூரியா ஹோட்டல் மற்றும் கண்ஷ்ட்ரோ மால் ஆகிய நிறுவனங்கள் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. அந்த மனுக்களில், எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் பொது ஊழியர் அவருக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்பதால் தங்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. நிறுவனங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில், இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், இந்த நிறுவனங்களுக்கு முறைகேட்டில் தொடர்பு உள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று தெரிவித்தார். அதேபோல், அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து குற்றப் பத்திரிகை தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, 5 நிறுவனங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது, எனக் கூறி நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் 6 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x