

தனது தந்தை மு.கருணாநிதி, தாயார் தயாளு அம்மாள் உடல்நலத்தை நேரில் வந்து விசாரித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார்.
முன்னதாக, நேற்று (திங்கள்கிழமை) தினத்தந்தி பவளவிழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் நரேந்திர மோடி திடீர் பயணமாக சென்னை கோபாலபுரத்துக்கு சென்று தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியை சந்தித்தார். கருணாநிதியை நலம் விசாரித்ததோடு அவரது மனைவி தயாளு அம்மாளையும் நலம் விசாரித்தார். கருணாநிதியுடனான மோடியின் இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுத்தது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 7) பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து மு.க.அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "எனது பெற்றோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததற்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது பெற்றோர் உடல்நலத்தில் தாங்கள் கொண்டுள்ள அக்கறை என்னை நெகிழச் செய்கிறது. தாங்கள், எனது பெற்றோரை சந்திக்கவருவது முன்னரே தெரியாததால் தங்களை வரவேற்க இயலவில்லை.
நீங்கள் எனது தந்தையை நேரில் வந்து பார்த்ததும் அவரை தங்கள் வீட்டில் தங்கி ஓய்வெடுக்குமாறு அழைப்பு விடுத்ததும் அவரது உடல்நிலை முன்னேற்றமடைய உதவும்.
நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் தங்களுக்கு எனது பாராட்டுகள்" இவ்வாறு அழகிரி தெரிவித்துள்ளார்.