

சென்னை: பாலியல் தொல்லை கொடுப்பதாக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது இளம் பெண் புகார் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஏகாட்டூரைச் சேர்ந்தவர் காயத்ரிதேவி. இவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் அதிமுக எம்.பி.யுமான ரவீந்திரநாத் மீது டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்க வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக எம்.பி.யான ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி எனக்கு தோழி. ரவீந்திரநாத்தை அண்ணனாக பாவித்து வருகிறேன். கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அதிகாலை 1 மணியளவில் ரவீந்திரநாத் அவரது செல்போன் வாட்ஸ்-அப் கால் மூலம் என்னை அழைத்தார். நானும் அண்ணனாக கருதி பேசினேன். ஒரு கட்டத்துக்கு பிறகு தவறான கண்ணோட்டத்தில் பேசத் தொடங்கினார். என்னை ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார்.
நான் மறுத்ததால் மிரட்டினார். இதையடுத்து நான் செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டேன். எனவே, பாலியல் ரீதியான தனது ஆசைக்கு இணங்கும்படி துன்புறுத்தும் மற்றும் கொலை மிரட்டல் விடுக்கும் ரவீந்திரநாத், உடந்தையாக இருக்கும் அவரது நண்பர் முருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியுள்ளதாக தெரிவித்தார்.