Published : 10 Nov 2017 10:17 AM
Last Updated : 10 Nov 2017 10:17 AM

பொறியியல் பட்டப் படிப்பு; அரியர் வைத்திருப்பவர்கள் தேர்ச்சிபெற கடைசி வாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருப்பவர்கள் தேர்ச்சி பெற அண்ணா பல்கலைக்கழகம் கடைசி வாய்ப்பு அளித்துள்ளது.

பொறியியல் பட்டப் படிப்பில் சேரும் மாணவர்கள் படிப்புக்காலம் முடிந்து அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அனைத்து அரியர்களையும் எழுதி தேர்ச்சி பெற்று விட வேண்டும் என்பது விதிமுறை ஆகும். ஆனால், அரியர் வைத்திருக்கும் மாணவர்களின் நலன் கருதி இந்த விதிமுறையை அண்ணா பல்கலைக்கழகம் கறாராக நடைமுறைப்படுத்தாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) நெருக்கடி காரணமாக அந்த விதிமுறையை இந்த ஆண்டு செயல்படுத்த முடிவு செய்தது.

40,000 பேர் பாதிப்பு

இதன் காரணமாக, அரியர் வைத்திருக்கும் பழைய மாணவர்கள் சுமார் 40,000 பேர் பாதிப்புக்கு உள்ளானார்கள். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து வந்த வேண்டுகோளை ஏற்று அரியர் வைத்திருக்கும் பழைய மாணவர்களுக்கு கடைசி இரண்டு வாய்ப்பு அளிக்க முன்வந்தது.

இதற்கான சிறப்பு தேர்வுகள் 2018 பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதம் நடத்தப்படும் என உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார்.

இந்த நிலையில், பழைய மாணவர்கள் அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது தொடர் பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியை ஜி.வி.உமா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடு தாண்டி அரியர் வைத்து பொறியியல் படிப்பை முடிக்காத மாணவர்களுக்கு 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு செமஸ்டர் தேர்வும், தொடர்ந்து ஆகஸ்டு மாதத்தில் மற்றொரு செமஸ்டர் தேர்வும் நடத்தப்படும். அரியர் மாணவர்கள் இரு வகையாக பிரிக்கப்படுகிறார்கள்.

பிரிவு-1: அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகளில் கடந்த 2000-ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் சேர்ந்தவர்கள்.

பிரிவு-2: அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் 2001-ம் ஆண்டு மற்றும் அதற்குப் பின்பு சேர்ந்தவர்கள் (3-வது செமஸ்டர் முதல்), 2002-ம் ஆண்டு மற்றும் அதற்குப் பின்னர் சேர்ந்தவர்கள் (முதல் செமஸ்டர்).

விண்ணப்பிக்க உதவும் தகவல்கள்

அரியர் தேர்வுகள், அதற்கு விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் (www.annauniv.edu), தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலக இணையதளத்திலும் (coe1.annauniv.edu) விரிவாக வெளியிடப்பட்டு இருக்கின்றன.

பழைய அரியர் பாடங்களை எழுதி தேர்ச்சிபெற இதுதான் கடைசி வாய்ப்பு ஆகும். இனிமேல் எந்தவித வாய்ப்பும் அளிக்கப்பட மாட்டாது. எனவே, அரியர் வைத்துள்ள பழைய பொறியியல் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அந்த மாணவர்கள் இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். தேர்வுக்கால அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x