Published : 16 Nov 2017 08:38 AM
Last Updated : 16 Nov 2017 08:38 AM

அதிமுக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.10,513 கோடி நிதி: திமுக ஆட்சியில்தான் பல்லவன் இல்லம் அடமானம் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல்

திமுக ஆட்சியின்போது பல்லவன் இல்லம் உட்பட 7 போக்குவரத்து பணிமனைகள் அடமானம் வைக்கப்பட்டன. போக்குவரத்து கழகங்களுக்கு அதிமுக ஆட்சியில் அரசு நிதியாக ரூ.10,513 கோடி வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: திமுக ஆட்சிக் காலத்தில் பல்லவன் இல்லம் உட்பட 7 போக்குவரத்து பணிமனைகள் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டன. அதையெல்லாம் மறுந்துவிட்டு அதிமுக ஆட்சியில் தான் பல்லவன் இல்லத்தை அடமானம் வைத்திருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 2006 - 2011 வரையில் 10 புதிய பணிமனைகள் மட்டுமே திறக்கப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் 42 புதிய பணிமனைகள் திறக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து கழகங்களுக்கு திமுக ஆட்சியின்போது ரூ.3,685 கோடி அரசு நிதி வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியின்போது ரூ.10,513 கோடி அரசு நிதி வழங்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு. செலவினங்களை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு குறைந்த கட்டணத்தில் சேவை அளித்து வருகிறது.

எல்லா ஆட்சியிலும் போக்குவரத்து துறையில் கடன் இருந்துள்ளது. லாபநோக்கமின்றி போக்குவரத்து கழகங்கள் செயல்படுகின்றன. விரைவில் 2,000 புதிய பேருந்துகளை வாங்கவுள்ளோம். படுக்கை வசதியுடன் கூடிய 40 பேருந்துகள், கழிப்பறை வசதியுடன் கூடிய 10 பேருந்துகள், பேட்டரி மூலம் இயங்கும் பேருந்துகளை இயக்கவுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x