Published : 17 Nov 2017 08:48 AM
Last Updated : 17 Nov 2017 08:48 AM

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு சம்மன்: விசாரணை கமிஷன் நீதிபதி ராஜேஷ்வரன் தகவல்

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும் என ஜல்லிக்கட்டு விசாரணை நீதிபதி ராஜேஷ்வரன் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டி சென்னை மெரினாவில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடந்தது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. ஜனவரி 23-ம் தேதி சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதுகுறித்து நீதி விசாரணை நடத்த பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தினர். இதன் அடிப்படையில் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு சம்பவத்தில் வன்முறை நடந்த சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் நீதிபதி ராஜேஷ்வரன் நேரடி விசாரணை நடத்தி பின்னர் சிலருக்கு சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் சேலத்தில் 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அதன் விசாரணை நேற்று தொடங்கியது.

விசாரணை நடத்த சேலம் வந்த நீதிபதி ராஜேஷ்வரன் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் கலவரம் தொடர்பாக 1,951 பேர் விசாரணை கமிஷனுக்கு பிரமாண பத்திரம் அனுப்பியுள்ளனர். இவர்களில் 447 பேருக்கு இதுவரை சம்மன் அனுப்பப்பட்டு 108 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளது. விசாரணையின்போது சிலர் நீண்ட நேரம் எடுத்து கொள்வதால் காலதாமதம் ஆகிறது. எனவே, விசாரணை முடிய ஏழு, எட்டு மாதங்களாகும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் ஜனவரி 23-ம் தேதி நடந்த வன்முறையின்போது பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும். ஜல்லிக்கட்டு தொடர்பான கலவரத்தில் சட்ட மீறல்களுக்கு யார் காரணம்? காவல்துறையின் அத்துமீறல் இருந்ததா? என்பது குறித்தும் இனி வரும் காலங்களில் இதுபோல போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க வழிமுறைகள் பரிந்துரைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x