Published : 06 Nov 2017 08:14 PM
Last Updated : 06 Nov 2017 08:14 PM
இலங்கை அருகே வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கன்னியாகுமரி கடலோரப் பகுதி முதல், தென்மேற்கு வங்கக் கடல் வரை பரவி இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்டது. அதே நேரத்தில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், இலங்கைக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.
அதன் காரணமாக, அடுத்து வரும் 24 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் விட்டு விட்டு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில நேரங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது'' என்று பாலசந்திரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT