Published : 18 Nov 2017 09:54 AM
Last Updated : 18 Nov 2017 09:54 AM

அனல்மின் உற்பத்திக்காக 2.50 லட்சம் டன் நிலக்கரி: மின்வாரியம் வாங்க முடிவு

அனல்மின் உற்பத்தி அதிகரித்துள்ளதையடுத்து, நிலக்கரித் தேவையை சமாளிக்க மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து 2.50 லட்சம் டன் நிலக்கரி வாங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் தனது 5 அனல்மின் நிலையங்களில் இருந்து 4,300 மெகாவாட் மின்சாரம் தயாரித்து வருகிறது. இந்த அனல்மின் நிலையங்களில் நாள்தோறும் 3,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கோல் இந்தியா நிறுவனம்

இதற்குத் தேவையான நிலக்கரி, ஒடிசா, தெலுங்கானா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து வாங்கப்படுகிறது. இதைத் தவிர, மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்திடம் இருந்தும் வாங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்தவாரம் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ததால் மின்பயன்பாடு குறைந்தது.

குறிப்பாக, தமிழகத்தின் மின்தேவை 10 ஆயிரம் மெகாவாட்டுக்குக் கீழ் குறைந்தது. இதையடுத்து, அனல்மின் உற்பத்தி நிலையங்களில் மின்உற்பத்தி குறைக்கப்பட்டது. இந்நிலையில், மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை குறைந்து மீண்டும் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளதால் மின்தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், மின்னுற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து நிலக்கரித் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, தேவையை சமாளிக்கும் விதமாக மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து 2.50 லட்சம் டன் நிலக்கரி வாங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

சுரங்கங்களில் மழைநீர்

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “மின்வாரியம் தனது அனல்மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை போதுமான அளவில் கையிருப்பில் வைத்திருக்கும். அண்மையில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்களில் மழைநீர் புகுந்ததால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் நிலக்கரி வரத்துக் குறைந்தது. எனவே, கையிருப்பில் இருந்த நிலக்கரி குறைந்து வருகிறது. இதையடுத்து, தேவையான நிலக்கரியை மீண்டும் கொள்முதல் செய்வதற்காக ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x