4 காவல்துறை ஏஎஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

4 காவல்துறை ஏஎஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

Published on

சென்னை: தமிழகத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்களுக்கு, காவல்துறை கண்காணிப்பாளர்களாக (எஸ்பி) பதவி உயர்வு வழங்கி பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலியன் I-ல், ஏஎஸ்பி எஸ்.ரவிச்சந்திரனுக்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி, திருச்சி மாநகர காவல்துறை தலைமையகத்தின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் காவல்துறை பயிற்சி பள்ளியில் ஏஎஸ்பியாக உள்ள ஹெச்.ரமேஷ் பாபுவுக்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி சென்னை மாநகர காவல்துறையின் உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் ஏஎஸ்பியாக உள்ள வி.மலைச்சாமிக்கு, எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கத்துறையின் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவின் ஏஎஸ்பியாக உள்ள ஏ.சி.செல்லபாண்டிக்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலியன் V-ன் கமாண்டண்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in