Published : 11 Nov 2017 09:23 AM
Last Updated : 11 Nov 2017 09:23 AM

கலப்பட மதுபானங்களை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

கலப்பட மதுபானங்களைத் தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளி்ல் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக புதிய மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்த மனுவில், ‘‘டாஸ்மாக் மதுபானங்களில் உடல் நலனைப் பாதிக்கும் அமிலம் அதிகம் உள்ளதாக தஞ்சாவூரில் உள்ள ஆய்வகம் பரிசோதித்து அறிக்கை அனுப்பியுள்ளது. அந்த ஆய்வறிக்கையை உணவுப் பாதுகாப்பு துறைக்கு அனுப்பிவைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபான வகைகளை ஆய்வுக்குட்படுத்தி பரிசோதிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் தரமற்ற மற்றும் கலப்பட மதுபானங்களை விற்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும், அதற்கு தடை விதிக்கவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களை ஆய்வு செய்யவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகளைச் சோதித்துப் பார்ப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே அந்த மதுபானங்களை உற்பத்தி செய்யும் ஆலைகளிலேயே அவற்றை ஆய்வு செய்யக்கோரும் வகையில் புதிதாக மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். அதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வழக்கை திரும்பப்பெறுவதாக கூறியதையடுத்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x