

சென்னை: நடிகை ஷோபனா, தன் வீட்டில் திருடிய பணிப்பெண்ணை மன்னித்து மீண்டும் பணி வழங்கியுள்ளார். பிரபல திரைப்பட நடிகை ஷோபனா. இவர் சென்னை தேனாம்பேட்டை சீனிவாசா சாலையில், தனது தாயார் ஆனந்தத்துடன் வசித்து வருகிறார். பரதநாட்டிய கலைஞரான ஷோபனா நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பாக்யராஜ் உட்பட பல்வேறு திரை பிரபலங்களுடன் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்திஉட்பட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
3 அடுக்கு கொண்ட இவரது வீட்டின் முதல் தளத்தில் தாயார்ஆனந்தம், இரண்டாம் தளத்தில் நடிகை ஷோபனா வசித்து வருகின்றனர். தரை தளத்தில் பரத நாட்டியபயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். மேலும், நடிகை ஷோபனாவீட்டில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த விஜயாஎன்ற பெண் கடந்த ஒரு வருடமாகத் தங்கி அவரது தாயாரைக் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகத் தாயார் ஆனந்தம் வீட்டில்வைத்திருந்த பணம் சிறுக சிறுககாணாமல் போனது. இதனால் நடிகை ஷோபனா வீட்டுப் பணிப்பெண் விஜயா மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் நடிகைஷோபனா வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில், பணிப்பெண் விஜயா, கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சிறுக சிறுக ரூ.41 ஆயிரம் திருடியது தெரியவந்தது. மேலும் திருடிய பணத்தை கார் ஓட்டுநர் முருகன் என்பவரிடம் கொடுத்து யுபிஐ செயலி மூலமாக ஊரில் உள்ள மகளுக்கு அனுப்பியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. வறுமையின் காரணமாக பணத்தைத் திருடியதாக, குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதால் நடிகை ஷோபனா புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் பணிப் பெண்ணை மன்னித்து தொடர்ந்து வீட்டில் பணி செய்ய ஒப்புக்கொண்டார். மேலும், திருடிய பணத்தை சம்பளப் பணத்திலிருந்து பிடித்தம் செய்துகொள்வதாக அவரிடம் ஷோபனா தெரிவித்துள்ளார்.