வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை: சென்னை ஆட்சியர் மு.அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி, 12-ம் வகுப்பு, பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளைப் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெறலாம்.

இதற்கு, சென்னை, கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம். மேலும், மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகள் கிண்டியில் உள்ள சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

ஏற்கெனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண், வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in