Published : 06 Nov 2017 10:21 AM
Last Updated : 06 Nov 2017 10:21 AM

3-வது நாளாக மழைநீர் ஓடுவதால் ஜிஎஸ்டி சாலையில்போக்குவரத்து பாதிப்பு: அமைச்சர்கள் ஆய்வு

சிங்கப்பெருமாள்கோவில் பகுதி யில் தேசிய நெடுஞ்சாலையில், மழைநீர் செல்வதால், மூன்றா வது நாளாக, வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சம்பவ இடத்தை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு மழைநீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

செங்கல்பட்டு அடுத்த, சிங்கபெருமாள்கோவிலில் தொடர்மழை காரணமாக பெரிய விஞ்சியம்பாக்கம் ஏரி நிரம்பியுள்ளது. இதனால், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர் அதிகமாக செல்வதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் அமைச்சர்கள் கே.பி. அன்பழகன் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஏரியின் உபரிநீர் செல்லும் கால்வாய் சிறியதாகவும், அடைப்பு ஏற்பட்டும் உள்ளது. எனவே அடைப்பை அகற்றி கால்வாயை அகலப்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.

மேலும் நிரந்தர கால்வாய் அமைக்க ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கவும் உத்தரவிட்டனர்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, செங்கல்பட்டு மழை வெள்ள பாதிப்பு ஆய்வு அலுவலர் ஆனந்த், செங்கல்பட்டு சார் ஆட்சியர் வி.பி.ஜெயசீலன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x