

சென்னை: சென்னை சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
ஏ.எம்.வி. பிரபாகர ராஜா எம்எல்ஏ, காரப்பாக்கம் கே.கணபதி, சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ், குடும்பத் தலைவிக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும்முகாம் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக முன்னரே விண்ணப்பப் படிவங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் ஜூலை 24-ம் தேதிமுதல் ஆகஸ்ட்4-ம் தேதிவரை முகாம்கள் மூலம்பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மாநகரில் 1,428 ரேஷன்கடைகள் உள்ளன. அவற்றில் முதற்கட்டமாக 704 ரேஷன் கடைகளில் இந்த பதிவு செய்யும் பணி நடைபெறுகிறது. மொத்தம் 1,730 விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் சென்னை மாநகரில் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொருமுகாம்களிலும் 2,266 பயோமெட்ரிக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், 704 சிறப்பு முகாம்பொறுப்பு அலுவலர்கள், 1,730 தன்னார்வலர்கள், 704 உதவி தன்னார்வலர்கள், 1,515 காவலர்கள், 154நகரும் குழுக்கள் இந்த சிறப்பு முகாம்களுக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ரேஷன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம்என்கின்ற வகையில் மொத்தம் 1,730 இடங்களில் சிறப்பு முகாம்கள்நடத்தப்படுகின்றன. 2-வது கட்டமாக முகாம்கள் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 724 ரேஷன் கடைகளில் நடைபெறவுள்ளன.
இரு முகாம்களில் விடுபட்டவர்களுக்காக ஆகஸ்ட் 17-ம் தேதிமுதல்28-ம் தேதிவரை மூன்றாம் கட்டமாகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும். சென்னை மாநகரில் மட்டும் 5,30,572 பேருக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களாகப் பூர்த்தி செய்யப்பட்ட 2,01,050 படிவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.