

சென்னை: கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு தொடர்பாக பேராசிரியர் ஹரிபத்மன் மீது 250 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த மார்ச் மாதம் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் துன்புறுத்தல், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்தனர். மேலும், தலைமறைவான அவரை கடந்த ஏப்ரல் 3-ம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இவ்விவகாரத்தில் ஹரிபத்மன் மட்டுமன்றி மேலும் சில ஊழியர்களும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், ஜாதி ரீதியாக பாகுபாடு பார்த்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவிகள் முன் வைத்தனர். இதுதொடர்பாக மாநில மகளிர் ஆணையமும் தலையிட்டு விசாரணை நடத்தியது. அப்போது நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்தனர். இதன்படி 162 பேர் புகார் அளித்ததைத் தொடர்ந்து மாநில மகளிர் ஆணையம் அப்புகார்களை சென்னை காவல் துறைக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில் பாலியல் புகார் தொடர்பாக இதுவரை 50-க்கும்மேற்பட்ட மாணவிகளிடம் அடையாறு அனைத்து மகளிர் போலீஸார் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி விவரங்களைச் சேகரித்துள்ளனர். இந்த நிலையில், பேராசிரியர் ஹரிபத்மன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 250 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் தாக்கல் செய்துள்ளனர்.
பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்ததை தொடர்ந்து கடந்த ஜூன் 6-ம் தேதி அவருக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தஹரிபத்மன் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட்டு வருவது குறிப்பிடத்தக்கது.