அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: ரூ.1 லட்சம் அபராதத்தை கலைஞர் நூலகத்துக்கு வழங்க உத்தரவு

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: ரூ.1 லட்சம் அபராதத்தை கலைஞர் நூலகத்துக்கு வழங்க உத்தரவு
Updated on
1 min read

மதுரை: நெல்லையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 உதவி செயற் பொறியாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்த உயர் நீதிமன்றம், அப்பணத்தை மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்க உத்தரவிட்டது.

நெல்லை திருநகரைச் சேர்ந்த மோகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லை திருநகரில் எனக்குச் சொந்தமான இடத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2017-ல் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை குடிசை மாற்று வாரியச் செயற் பொறியாளர் ஏற்றுக்கொண்டார்.

இத்திட்டத்தில் ரூ.2.10 லட்சம் நான்கு தவணைகளில் தரப்படும் என்று தெரிவித்தனர். வீடு கட்டும் பணி தொடங்கிய பின்பு 2 தவணைகளில் ரூ.1 லட்சம் தந்தனர். வீடு கட்டுவதில் ஒப்பந்ததாரர் பல்வேறு முறைகேடுகள் செய்தார். இதுகுறித்து உதவி செயற் பொறியாளர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கவும், எனக்கு மீதமுள்ள தொகையை வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் குடிசை மாற்று வாரிய உதவி செயற் பொறியாளர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு முறையாகப் பதிலளிக்கவில்லை.

எனவே, உதவி செயற் பொறியாளர்கள் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளான 2 உதவி செயற் பொறியாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்க வேண்டும்.

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மீது குற்ற வழக்குப் பதிவுசெய்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் நோக்கம் பயனாளிகளைச் சென்றடையும் வகையில் மத்திய அரசு உரிய வழிமுறைகளை வகுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in