Published : 23 Nov 2017 11:06 AM
Last Updated : 23 Nov 2017 11:06 AM

கடன் தொல்லையால் தொழிலதிபர் தற்கொலை: கோத்தகிரியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்

கோத்தகிரியில் தொழில் அதிபர் கடன் தொல்லையால் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேணு பகுதியைச் சேர்ந்தவர் பெள்ளிராஜ் (80). இவர் மெட்ரிக் பள்ளி நடத்தி வந்தார். இவருக்கு தேயிலைத் தொழிற்சாலை, திருமண மண்டபம், டீ எஸ்டேட் போன்றவையும் உள்ளன. கோவையில் ஸ்பின்னிங் மில் வைத்துள்ளார்.

நேற்று காலை நடைப்பயிற்சி சென்றுவிட்டு பெள்ளிராஜ் வீடு திரும்பியுள்ளார். சிறிது நேரத்தில் வந்த அவரது அறையிலிருந்து சப்தம் கேட்டு, சென்று பார்த்தபோது, பெள்ளிராஜ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

தனது பாதுகாப்புக்காக உரிமம் பெற்று வைத்திருந்த ரிவால்வரால் பெள்ளிராஜ் சுட்டுக் கொண்டுள்ளார்.

தகவலின் பேரில், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையிலான போலீஸார், பெள்ளிராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கோத்தகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது: பெள்ளிராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இதற்காக திருப்பூரை சேர்ந்தவர்களிடம் கடன் பெற்றுள்ளார். அவர்கள் கடனை திருப்பி கொடுக்க தொடர்ந்து மிரட்டியுள்ளனர். இதனால், அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திவருகிறோம் என்றனர். பெள்ளிராஜூக்கு மனைவி, மகன், 3 மகள்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x