ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகள் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகள் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக தொடரப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி எம்.பி, எம்எல்ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், அத்தொகுதி வாக்காளர் மிலானி தாக்கல் செய்த மனுவில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அதேபோல், 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் அவரது மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். இருவரும் தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்கள், கல்வித் தகுதிகள் குறித்த தகவல்களை மறைத்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த புகாரை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் மீதான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

சிறப்பு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தேனி நீதிமன்றத்தில் புகார்தாரர் தாக்கல் செய்த புகார் மனுவுக்கு ஆதரவாக எந்த பிரமாண மனுவையும் தாக்கல் செய்யவில்லை. பிரமாண மனு இல்லாமல் தாக்கல் செய்யப்படும் புகார் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in