

மதுரை: ராமேஸ்வரத்தில் நாளை தொடங்கும் 'என் மண், என் மக்கள்' யாத்திரை பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக உதவும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''ராமேஸ்வரத்தில் 'என் மண், என் மக்கள்' யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தொடங்கி வைக்கிறார். நாளை தொடக்க விழா மட்டுமே நடைபெறும். ஜூலை 29-ல் யாத்திரை தொடங்கும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் யாத்திரை செல்லவுள்ளது. நாளை முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் முதல் கட்ட யாத்திரைக்கு பாஜக மூத்த தலைவர்கள் யாத்திரைக்கு தலைமை வகிப்பார்கள். முதல் கட்ட யாத்திரைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார்.
மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் யாத்திரை நடைபெறும். மக்கள் வசிக்கும் பகுதிகளில் கால்நடையாகவும், மக்கள் வசிக்காத பகுதிகளில் வாகன யாத்திரையும் நடைபெறும். 1700 கிலோ மீட்டர் கால்நடையாகவும், 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் யாத்திரை நடைபெறும். ஜன.11-க்குள் முன்பு யாத்திரை முடிக்கப்படும். யாத்திரை நிறைவு நாள் பிரமாண்டமாக நடத்தப்படும்.
யாத்திரை தொடக்க விழாவுக்கு கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவர் சேலத்தில் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.
மோடியை 3-வது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்தில் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. யாத்திரை தொடக்க விழாவில் மோடி என்ன செய்தார் என்ற புத்தகம் வெளியிடப்படும். சட்டசபை தொகுதி வாரியாக நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கையேடும் வெளியிடப்படும். இந்த யாத்திரை 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க நிச்சயம் துணைபுரியும். 10 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்'' என்று அவர் கூறினார்.