தாம்பரத்தில் புதிய காவல் ஆணையர் அலுவலகம் கட்ட அனுமதி: பணிகளை விரைவாக தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தாம்பரத்தில் புதிய காவல் ஆணையர் அலுவலகம் கட்ட அனுமதி: பணிகளை விரைவாக தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தாம்பரத்தில் தனியார் கல்வி நிறுவனத்திடம் இருந்து மீட்கப்பட்ட நான்கு ஏக்கர் நிலத்தில், புதிதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகம் கட்ட அனுமதி அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பான பணிகளை விரைவாக தொடங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவி்ட்டுள்ளது.

கடந்த 1944-ம் ஆண்டு தாம்பரத்தில் 9 ஏக்கர் 77 சென்ட் நிலம், பல்வேறு நிபந்தனைகளுடன் தனியார்கல்வி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், மீதமுள்ள 4 ஏக்கர் 77 சென்ட் நிலத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் கட்ட அரசு முடிவு எடுத்தது.

இதற்கிடையே, அரசு ஒதுக்கிய 9.77 ஏக்கர் நிலத்துக்கும் பட்டா வழங்கக் கோரி, அந்த தனியார் கல்வி நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்விப் பயன்பாட்டுக்காக அரசு ஒதுக்கிய நிலத்தின் எதிரேயுள்ள தனியார் நிலத்தை விலைக்கு வாங்கியுள்ள இந்த கல்வி நிறுவனம், அந்த இடத்தை நர்சிங் கல்லூரி, பெட்ரோல் பங்க், உணவகங்கள் உள்ளிட்டவை நடத்தும் பல தனி நபர்களுக்கு வாடகைக்கு விட்டு, பெரிய அளவில் வருமானம் ஈட்டி வருவதால், அரசு ஒதுக்கிய நிலத்துக்கு பட்டா வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, ‘‘அரசு விதித்த நிபந்தனைகளை அந்த கல்வி நிறுவனம் மீறியுள்ளதால், அந்த நிலத்துக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது” என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவி்ட்டார். மேலும், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக கட்டிடத்துக்காக ஒதுக்கப்பட்ட அந்த நிலத்தில், ஆணையர் அலுவலக கட்டுமானப் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்றும் அனுமதி அளித்து, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in