Published : 26 Jul 2023 05:52 AM
Last Updated : 26 Jul 2023 05:52 AM

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் 9 பேர் கைது

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து நேற்று முன்தினம் 400 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், வேல்முருகன், தட்ஷிணாமூர்த்தி ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை எல்லை தாண்டியதாகக் கூறி சிறைப்பிடித்தனர். மேலும், அப்படகுகளில் இருந்த சுரேஷ், ஆறுமுகம், முத்துக்குமார், மணிகண்டன், ஜெயசீலன், வேலு, முத்து இருளாண்டி, முகம்மது பக்ருதீன், ரங்கசாமி ஆகிய 9 மீனவர்களையும் கைது செய்தனர்.

பின்னர், இவர்களை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு சென்று, அந்நாட்டு மீன்வளத் துறையினரிடம் ஒப்படைத்தனர். அங்கு விசாரணைக்குப் பின்னர், மீனவர்கள் அனைவரும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.

8-ம் தேதி வரை சிறை: இவர்களை ஆக. 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து மீனவர்கள் 9 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின்14 விசைப்படகுகளுடன் 83 பேர் சிறை பிடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x