Published : 01 Nov 2017 03:18 PM
Last Updated : 01 Nov 2017 03:18 PM

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

கொடுங்கையூரில் தேங்கிய மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். மின்வாரியத்தின் அலட்சியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை கொடுங்கையூர், ஆர்.ஆர் நகரில் வசிப்பவர் பார்த்திபன் இவரது மகள் பாவனா(எ) மணிமேகலை(8), இதே பகுதியில் வசிப்பவர் மூர்த்தி இவரது மகள் யுவஸ்ரீ(8) அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் இவர்கள் அருகிலுள்ள அரசுப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தனர்.

இன்று மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பாவனா, யுவஸ்ரீ மற்றொரு சிறுமி மூவரும் வெளியே தெருவில் விளையாடச்சென்றனர். விளையாட்டு ஆர்வத்தில் அவர்கள் வீட்டருகில் மின் இணைப்பு பெட்டி இருக்கும் பகுதிக்கு அருகில் சென்றுள்ளனர்.

மின் இணைப்பு பெட்டிக்கு அருகில் மழை நீர் தேங்கி இருந்துள்ளது. அதில் மின் இணைப்புப் பெட்டியிலிருந்த மின்சாரம் பாய்ந்துள்ளதை அறியாத சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டனர். இதில் மூன்றாவதாக பின்னால் வந்த மாணவி பின் வாங்கியதால் மின்சாரம் பாயாமல் தப்பித்தார்.

மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட இரண்டு சிறுமிகளையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் சிறுமிகள் இருவரும் வழியிலேயே உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரியத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாகவே மின் இணைப்பு பெட்டியிலிருந்த மின்சார ஒயர் தண்ணீரில் விழுந்துள்ளது. இதனால் அதில் கால் வைத்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். சற்று பின்னால் வந்ததால் மூன்றாவது சிறுமி உயிர் பிழைத்தார். போராட்டம் நடத்திய பொதுமக்களை கொடுங்கையூர் போலீஸார் சமாதானப்படுத்தினர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை வெள்ளத்தால் உயிரிழப்புகள் 4 ஆக அதிகரித்துள்ள நிலையில் இன்று கொடுங்கையூரில் இரண்டு பள்ளிச் சிறுமிகள் உயிரிழந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x