Published : 13 Nov 2017 09:58 AM
Last Updated : 13 Nov 2017 09:58 AM

மன்னார்குடியில் திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியின் ஒரு அறைக்கு சீல் வைப்பு: ஆவணங்களை சென்னைக்கு எடுத்துச் சென்ற வருமான வரி அதிகாரிகள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சசிகலாவின் தம்பி திவாகரனுக்குச் சொந்தமான கல்லூரியில் சோதனை நடத்திய வருமான வரித் துறை அதிகாரிகள், அங்குள்ள ஒரு அறையை பூட்டி சீல் வைத்துள்ளனர். வீடு, கல்லூரியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களைச் சென்னைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

மன்னார்குடியை அடுத்துள்ள சுந்தரக்கோட்டையில் சசிகலாவின் தம்பி திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில் கடந்த 9-ம் தேதி தொடங்கிய வருமான வரி சோதனை, நேற்று அதிகாலை 3.45 மணிக்கு நிறைவடைந்தது. 3-வது நாளான 11-ம் தேதியன்று கல்லூரிக்கு வரவழைக்கப்பட்ட திவாகரனிடம் பிற்பகல் 12.45 மணி முதல் நேற்று அதிகாலை 3.45 மணி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கல்லூரியில் உள்ள ஒரு அறையை மட்டும் பூட்டி சீல் வைத்தனர்.

அதன்பின், 6 கார்களில் 200-க்கும் மேற்பட்ட ஆவணங்களை 15 பண்டல்களாக கட்டி சென்னைக்கு எடுத்துச் சென்றனர். மேலும், அவரது வீட்டில் நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வருமான வரி சோதனைக்காக 15 கார்களில் 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்திருந்தனர்.

வருமான வரி சோதனை தொடங்கியதில் இருந்தே செய்தியாளர்களை திவாகரன் சந்திக்கவில்லை. நேற்று முன்தினம் மதியம் விசாரணைக்குப் பின் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு செல்ல புறப்பட்ட திவாகரனிடம், இந்த சோதனை குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, பின்னர் சந்திப்பதாக கூறினார்.

இதனால், செய்தியாளர்கள் விடியவிடிய அவருக்காக கல்லூரிக்கு வெளியே காத்திருந்தனர். நேற்று அதிகாலையில் 3.45 மணிக்கு வருமான வரி சோதனை முடிந்து கல்லூரியில் இருந்து அதிகாரிகள் புறப்பட்டனர். அப்போது, திவாகரனையும் அதிகாரிகளின் காரில் ஏற்றிக்கொண்டு வீட்டில் கொண்டுபோய் விட்டுச்சென்றனர்.

செய்தியாளர்களைச் சந்திக்கக் கூடாது என திவாகரனுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளதாகவும், அதனால் அவர் செய்தியாளர்களைக் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x