

தென்காசி: திமுக மகளிரணி சார்பில் தென்காசியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உட்கட்சி பூசலால் மோதல் ஏற்பட்டு பரபரப்பானது.
தென்காசி மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் இருந்து வருகிறது. தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த செல்லத்துரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு,கட்சி தலைமையால் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துசெல்லத்துரை ஆதரவாளர்கள் சென்னையில் அண்ணா அறிவாலயம் முன் போராட்டத்தில் ஈடுபட்டது, அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கிடையே தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபனுக்கும், செல்லத்துரை ஆதரவாளராக கருதப்படும் மாவட்ட ஊராட்சித் தலைவர் தமிழ்செல்விக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே திமுக மகளிரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிவ பத்மநாபன் மற்றும் தமிழ்செல்வி இடையே மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழ்செல்வியை மேடையில் பேசவிடாமல் சிவ பத்மநாபன் தடுத்து மைக்கை பறித்தார். இதனால் மேடையில் தள்ளுமுள்ளு, மோதல் ஏற்பட்டது. சிவ பத்மநாபனும், தமிழ்செல்வியும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களது ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்ட மேடையில் திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கிடையே தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டி ஆட்சியருக்கு தமிழ்செல்வி மனு அனுப்பியுள்ளார்.