Published : 25 Nov 2017 05:15 PM
Last Updated : 25 Nov 2017 05:15 PM

அன்புச்செழியன் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ்: தேனிக்கு விரைந்தது தனிப்படை

அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்படும் அன்புச்செழியன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்செலாமல் இருக்க விமான நிலையங்களுக்கு காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடந்த வாரம் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.  தற்கொலைக்கு காரணமாக அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அதில் பைனன்சியர் அன்புச்செழியன் துன்புறுத்தலால்தான் தற்கொலை செய்துக்கொள்வதாக எழுதி வைத்திருந்தார்.

இரண்டு பக்கம் உள்ள அந்த கடிதத்தில் சசிகுமார் அன்புச்செழியனால் துன்பத்தை அனுபவித்து வருகிறார், இனியாவது சசிகுமாரை துன்பறுத்த வேண்டாம், அன்புச்செழியனுக்கு இருக்கும் அரசியல் பலத்தில் என் தற்கொலை ஒன்றுமில்லாமல்கூட போகலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

சசிகுமார் புகாரை அடுத்து அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக (பிரிவு. 306)வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அன்புச்செழியன் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருக்கிறார். அவரது நிறுவனத்தின் ஊழியர்களும் நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

அன்புச்செழியனை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில் அன்புச்செழியனுக்கு ஆதரவாக திரையுலகில் ஒரு பிரிவினர் அறிக்கை விட்டு வருகின்றனர். ஆனாலும் அன்புச்செழியனை பிடிப்பதிலும், அன்புச்செழியன் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அன்புச்செழியன் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸை அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் அளித்துள்ளனர். இதன் மூலம் அனைத்து விமான நிலையங்களிலும் அன்புச்செழியன் பற்றிய தகவல், பாஸ்போர்ட் தகவல் அளிக்கப்படும். அவர் ஒருவேளை வெளிநாடு செல்ல முயன்றால் அவரை பிடித்து கைது செய்வார்கள்.

இதுதவிர அன்புச்செழியன் எங்கே இருக்கிறார் என்பதை அறியும் முயற்சியில் தனிப்படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். மதுரை செல்ல அன்புச்செழியன் பெயரில் தனியார் விமானம் மூலம் இரண்டு நாட்களுக்கு முன்னர் டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருந்து பின்னர் ரத்து செய்யப்பட்டது.

இதைத் தனிப்படை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கிடையே கார் மூலம் தேனிக்கு அன்புச்செல்வன் செல்வதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து தேனிக்கும் தனிப்படை போலீஸார் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x