Published : 17 Nov 2017 09:31 AM
Last Updated : 17 Nov 2017 09:31 AM

குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண காவல் துறையில் புது சாப்ட்வேர் அறிமுகம்

குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண காவல்துறையில் புதிய வகை சாப்ட்வேர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்த சாப்ட்வேர் இணைக்கப்பட்டுள்ள செல்போன்களில் சந்தேகப்படும் நபர்களை போலீஸார் படம் எடுத்தால், சம்பந்தப்பட்டவர் குற்றப் பின்னணி கொண்டவரா? இல்லையா? என்பது அடுத்த 10 விநாடிகளில் தெரிந்துவிடும்.

இந்த சாப்ட்வேர் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி, தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் எம்.சி.சாரங்கன் மேற்பார்வையில் தியாகராயநகர் துணை ஆணையர் பி.அரவிந்தன் தலைமையில் தியாகராயநகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.அரவிந்தன் கூறும்போது, “பழைய குற்றவாளிகளின் பெயர், முகவரி, படங்கள் முதலியவை தொகுக்கப்பட்டு அவை புது சாப்ட்வேர் மூலம் செல்போனுடன் இணைக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள், வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீஸார் என 500 பேரின் செல்போனுடன் முதல்கட்டமாக இது இணைக்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்களை புகைப்படம் எடுத்தால் அடுத்த 10 விநாடிகளில் அவர் குற்ற பின்னணி கொண்டவரா? என தெரிந்து விடும். விரைவில் தியாகராயநகரில் உள்ள அனைத்து போலீஸாரின் செல்போனுடனும் இது இணைக்கப்பட உள்ளது. இதன்மூலம் தலைமறைவாக இருந்த 6 பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x