Last Updated : 31 Jul, 2014 12:04 PM

 

Published : 31 Jul 2014 12:04 PM
Last Updated : 31 Jul 2014 12:04 PM

பெங்களூரில் முழு அடைப்பு: தமிழக அரசு பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம்; பயணிகள் அவதி

கர்நாடகா தலைநகர் பெங்களூரில் முழு அடைப்பு காரணமாக, தமிழக பேருந்துகள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை கண்டித்தும், இதனை தடுக்கவோ, தண்டிக்கவோ அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் பெங்களூரில் 50 -க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் முழு அடைப்புக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, வேலூர், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சென்ற தமிழக அரசு பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையத்திலேயே இன்று காலை 5 மணி முதல் நிறுத்தப்பட்டு வருகிறது.

தினமும் 500க்கும் மேற்பட்ட தமிழக அரசு பேருந்துகள் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது. ஆனால் இந்த முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக பேருந்துகள் அனைத்தும் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர். மேலும் பயணிகள், ஓசூர் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கர்நாடகாவிற்கு செல்லும் கர்நாடக அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் சென்ற வண்ணம் உள்ளனர். ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நகர பேருந்துகள் அனைத்தும் ஜூஜூவாடியுடன் நின்றுவிடுகிறது. இதனால் நகர பேருந்துகளில் செல்லும் பயணிகள் ஜூஜூவாடியில் இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து அத்திப்பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்த போராட்டம் இன்று மாலை 5 மணி வரை நடைபெறும் என்பதால் அதுவரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அனைத்து அரசு பேருந்துகளும் ஓசூரில் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x