Published : 13 Nov 2017 02:07 PM
Last Updated : 13 Nov 2017 02:07 PM

4 வயது பெண் குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து கொலை: தந்தையின் தோழி கைது

குன்றத்தூர் மூன்றாங்கட்டளை பகுதியில் வசிப்பவர் தர்மலிங்கம்(எ) சரவணன். வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும் , 4 வயதில் கோஷிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரஞ்சனி பிரிந்து சென்று தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

குழந்தை கோஷிகா தந்தை சரவணன் பராமரிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் விவாகரத்து வழக்குக்காக அரக்கோணத்தில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மனைவி ஆஷா என்பவர் சரவணனிடம் வந்துள்ளார். வழக்குக்காக வந்தவர் நாளடைவில் சரவணன் வீட்டிலேயே தங்கி வீட்டு வேலைகளை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சரவணனின் தாயார் சமீபத்தில் மரணமடைந்துள்ளார். தாயாரின் திவசத்தில் சரவணனும் அவரது தந்தையும் ஈடுபட்டிருந்த நிலையில் குழந்தை கோஷிகா இருப்பது தனக்கு இடையூறு என்று எண்ணிய ஆஷா, குழந்தையை  குளிக்க அழைத்துச்செல்வது போல் அழைத்துச் சென்று வாளியில் தண்ணீர் நிரப்பி குழந்தையை அதில் மூழ்கடித்துள்ளார்.

குழந்தை சத்தம் போட்டதால் அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். குழந்தை வாளியில் விழுந்து விட்டதாகக் கூறியுள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், ஆஷாவை கைது செய்தனர். குழந்தையை ஆஷா எதற்காகக் கொலை செய்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x