Published : 15 Nov 2017 08:13 PM
Last Updated : 15 Nov 2017 08:13 PM
புதிய மின் மீட்டர்கள் கொள்முதல் தொடர்பான வழக்கில் தமிழக மின்வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வீடுகளில் உள்ள பழைய மின் மீட்டர்களை மாற்றிவிட்டு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய மின் மீட்டர்களை பொருத்த வேண்டும் என மத்திய மின்சார ஆணையம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், புதிய மின் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழக மின்வாரியம் டெண்டர் அறிவித்தது.
அந்த டெண்டரின் போது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சாதகமாக மின்வாரியம் முடிவு எடுத்ததாகக் கூறி டெண்டரில் போட்டியிட்ட மற்றொரு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் மீட்டர் கொள்முதலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், அதுகுறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் டெண்டர் அடிப்படையில் மின் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்கு இன்று இடைக்கால தடை விதித்துள்ளார். இந்த உத்தரவை வரவேற்கிறேன்.
சமீபகாலமாக அதிமுக அரசு பல்வேறு துறைகளில் எடுக்கும் முடிவுகளை நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிப்பது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு குரலை உதாசீனப்படுத்தும் அதிமுக அரசு நீதிமன்றங்களின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT