அரசு போக்குவரத்துக் கழகத்தில் 8 மணி நேரத்துக்கு மேல் பணி வழங்க கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு போக்குவரத்துக் கழகத்தில் 8 மணி நேரத்துக்கு மேல் பணி வழங்க கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினருக்கு 8 மணி நேரத்துக்கு மேல் பணி வழங்கக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

போடி அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியுசி செயலாளர் சுந்தர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: போக்குவரத்துக் கழகத்தில் திண்டுக்கல் மண்டலத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் சில தடங்களில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு 24 மணி நேர வேலை வழங்குகின்றனர். அவர்கள் ஓய்வின்றி 24 மணி நேரமும் பணியாற்றுவதால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

எனவே போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் பயணிகளின் நலன்கருதி, நாளொன்றுக்கு 8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக் கூடாது என்றும், 24 மணிநேரம் பணியாற்றத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

நடுவழியில் பேருந்தை...: இந்த மனுவை விசாரித்து நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு முடியும் வரை மனுதாரர் சங்கத்தினருக்கு 8 மணி நேரத்துக்கு மேல் பணி ஒதுக்க கூடாது. குறிப்பிட்ட நேரம் கடந்து விட்டது என்பதற்காக நடுவழியில் பேருந்தை நிறுத்திவிட்டு செல்லக்கூடாது. இந்த தடத்தில் குறிப்பிட்ட பணியை முடிக்க வேண்டும். மனுவுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் பதிலளிக்க வேண்டும். விசாரணை ஜூலை 27-க்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in