இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற பிரியன் ரோஸ், ஜார்ஜ், அந்தோணி, பிரதீபன், ஈஷாக், ஜான், ஜனகர், கிறிஸ்து, ஆரோக்கியராஜ் , ஜெர்மஸ், ஆரோக்கியம், ரமேஷ், ஜெகன், பிரபு, மெல்டன் ஆகிய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில், ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி கஜநிதிபாலன், மீனவர்கள் 15 பேரும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், ஆக.4-ல் படகுகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
