Published : 21 Jul 2023 02:50 PM
Last Updated : 21 Jul 2023 02:50 PM

விரைவில் 4,000 காலியிடங்களில் கவுரவ பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி உறுதி

அமைச்சர் பொன்முடி | கோப்புப்படம்

சென்னை: பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்களுடன் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "2023-24-ம் கல்வியாண்டில் இருந்தே பொது பாடத்திட்டம் கலை அறிவியல் கல்லூரிகளில் எல்லாம் அறிவிக்கப்பட்டுவிடும். புதிதாக ஏதாவது பாடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தால், அவற்றுக்கு இந்தாண்டு அதற்கான பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, 2024-25ம் கல்வியாண்டில் இருந்து நிறைவேற்ப்படும்.

அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தன்னாட்சி கல்லூரிகள் அனைத்து கல்லூரிகளிலும் இந்தப் பாடத்திட்டங்கள் ஒரே மாதிரியாக பின்பற்றப்படும். இதனால், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு நன்மை. ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து வேறு பல்கலைக்கழகத்துக்கு மாறுகின்ற மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என்கிற அடிப்படையில்தான் இந்தப் பாடத்திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். இதற்கு அனைத்து துணைவேந்தர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

என்ஐஆர்எஃப் ரேக்கிங் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியெல்லாம் துணைவேந்தர்கள் தங்களுடைய கருத்துகளை கூறியிருக்கிறார்கள். முதல்வர் அறிவித்ததைப் போல, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், பாடங்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டு, அதன்மூலம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பு பெறும் வகையில் அந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

என்ஐஆர்எஃப் ரேக்கிங்கில், தேசிய அளவில் இடம்பெறுவதற்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அளவில் தரம் உயர்த்த அறிவுறுத்தியிருக்கிறோம். இதற்கு அனைத்து துணைவேந்தர்களும் தங்களுடைய முழு முயற்சியையும் அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். நிச்சயமாக வரும் ஆண்டுகளில், கல்வித்தரம் உலக அளவிலும், இந்திய அளவிலும் உயர்த்தப்படும்.

பல்கலைக் கழகங்களில் உள்ள பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் பலர் தற்காலிகமாகவே இருப்பதாக சொல்லப்பட்டது. இது தொடர்பாகவும் இன்று விவாதித்தோம். சில பல்கலைக்கழகங்களில் நிரந்தரமாக பணி நியமனம் பெற்றவர்கள் உள்ளனர். சில பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் நிறைவேற்றப்படும். சில கல்லூரிகளில் தற்காலிகமாக சில பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பல்கலைக்கழகங்களுக்கு நிரந்தர பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் நியமிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறையில் பணியிடங்களை பூர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்படவுள்ளது. அந்த குழுவில், துணைவேந்தர், அரசு நியமன உறுப்பினர், உள்ளிட்ட 4 முதல் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் மூலம் இந்த பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கும் துணைவேந்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதுவும் விரைவில் நடக்கும்.

பல இடங்களில் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் 4000 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆணை வழங்கியுள்ளார். அது கொஞ்சம் காலதாமதப்படுகிறது. அதுவும் விரைவில் முடிவு செய்யப்பட்டு, அவர்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த 4000 காலியிடங்களில் கவுரவ பேராசிரியர்களையும் நாங்கள் நியமித்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x