

மதுரை: பாஜகவால் முறித்துக்கொள்ளும் வரையில் அவர்கள் கூட்டணியில் தொடருவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "மணிப்பூர் கலவரத்தை நிறுத்தி, நிரந்தர அமைதி ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். கொலை போன்ற குற்றச்செயல்களை தடுப்பது மாநிலத்தின் கடமையாக இருக்கவேண்டும்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என இன்னும் என்னைத்தான் தேர்தல் ஆணையம் கூறுகிறது. இது பற்றி உங்களுக்கு (பத்திரிகையாளர்கள்) புரியும் எனக் கருதுகிறேன். ஆனால், புரியவேண்டியவர்களுக்கு புரியவில்லை.
பாஜகவால் முறித்துக்கொள்ளும் வரையிலும் நாங்கள், அவர்கள் கூட்டணியில் தொடர்வோம். திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டியது அவர்களின் பொறுப்பு. ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி தகுதி நீக்கம் குறித்து நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்" என்று கூறினார்.