Published : 18 Nov 2017 10:43 AM
Last Updated : 18 Nov 2017 10:43 AM

மின்வாரியம் வெளிப்படையாக செயல்படுகிறது: மின்சார மீட்டர் கொள்முதலுக்கு டெண்டர் இறுதி செய்யப்படவில்லை - அமைச்சர் பி.தங்கமணி விளக்கம்

மின்சார மீட்டர் கொள்முதலுக்கு எந்த டெண்டரும் இறுதி செய்யப்படவில்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக மின்வாரியத்துக்கு மின்சார மீட்டர் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதில் எந்தவித உண்மையும் இல்லை. மின்சார மீட்டர் கொள்முதல் செய்ய டெண்டர் விட்டதில், 13 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 6 நிறுவனங்களின் டெண்டர் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 7 நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எந்த நிறுவனத்துக்கும் டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. மின்சார வாரியத்தில் செய்யப்படும் அனைத்து கொள்முதலும் இ-டெண்டர் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. மின்சார வாரியம் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக செயல்படுகிறது.

திமுக ஆட்சியில் மின்சார வாரியம் ரூ.25,000 கோடி கடனில் இருந்தது, தினமும் 18 மணி நேர மின் தடை இருந்தது. அதிமுக ஆட்சியின் சிறப்பான செயல்பாடு காரணமாக கடன் அளவு குறைக்கப்பட்டு வருகிறது. மேலும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் மின்சார வாரியம் குறித்து எந்த உண்மை தகவலும் தெரியாமல், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மின்சார மீட்டர் கொள்முதல் குறித்து உண்மைக்கு மாறான அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இனிமேல் அறிக்கை வெளியிடும் முன்பு உண்மை என்ன என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x