Published : 20 Jul 2014 02:33 PM
Last Updated : 20 Jul 2014 02:33 PM

நீதித்துறையின் செயல்பாடுகளில் ஜெயலலிதா தலையிட்டதில்லை: நீதிபதி மார்கண்டேய கட்ஜு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தான் பதவி வகித்திருந்த காலத்தில் நீதித்துறையின் செயல்பாடுகளில் ஜெயலலிதா தலையிட்டதில்லை என்று மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

"சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக என் அனுபவங்கள்” என்ற தலைப்பில் அவர் தனது ஃபேஸ்புக்கில் இட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

2004-05 ஆம் ஆண்டில் நான் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியாற்றியபோது, முதல்வராக இருந்த ஜெயலலிதா நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிட்டதில்லை. (அதாவது நீதிபதி இடங்களைப் பூர்த்தி செய்வதில்), நீதிபதி பொறுப்பிற்கு இவரை நியமியுங்கள் என்று அவர் ஒருவரையும் பரிந்துரை செய்து எனக்கு அழுத்தம் கொடுத்ததில்லை. அதுமட்டுமல்லாது, நீதித்துறையின் செயல்பாட்டில் அவர் எந்த விதத்திலும் தலையிட்டதில்லை. நான் தலைமை நீதிபதியாக இருந்தபோது அவரிடமிருந்து எந்த விதமான அழுத்தமும் எனக்கு வந்ததில்லை, ஏனெனில் அவர் நீதித்துறையின் சுதந்திரத்தை மதிப்பவர்” என்று அவர் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியபோது, "ஆனால் மற்றொரு கட்சி தனது பிரதிநிதிகள் மூலம் நீதிபதிகளை நியமிப்பதில் நெருக்கடி கொடுத்தது. ஆனால் அவர்கள் பரிந்துரை செய்த நபர்கள் என்னைப் பொருத்தவரை நீதிபதிப் பொறுப்பிற்கு தகுதியற்றவர்கள்.

இவர்களில் சிலரை நான் நீதிமன்றத்திலேயே பார்த்ததில்லை என்றாலும் இவர்கள் பெயர்கள் வழக்கறிஞர்கள் பட்டியலில் இருந்தது. இவர்கள் அந்தக் குறிப்பிட்டக் கட்சியைச் சேர்ந்தவர்கள், இவர்களை பரிந்துரை செய்வதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களது கட்சியைச் சேர்ந்த நபர்களை அதிகம் இருக்கச்செய்ய விரும்பியது அந்தக் கட்சி. ஆனால் அந்தக் கட்சியின் நெருக்கடிக்கு நான் இசைந்து கொடுக்கவில்லை” என்று அவர் எழுதியுள்ளார்.

பிறகு தலைமை நீதிபதி கட்ஜுவினால் 20 பெயர்கள் நீதிபதிப் பொறுப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்டதில் 17 பெயர்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையிலும், அந்தக் குறிப்பிட்ட கட்சி கொடுத்த நெருக்கடி பற்றி கட்ஜு கூறியபோது, "இந்த நீதிபதிகளை நியமித்து விடாத அளவுக்கு அந்தக் கட்சி எனக்கு மீண்டும் நெருக்கடி கொடுத்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த 17 பேர் நீதிபதியாகப் பொறுப்பேற்றனர்” என்று கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் பணியாற்றிய காலத்தின் அனுபவங்களை மேலும் அவர் எழுதப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x