Published : 16 Nov 2017 11:31 AM
Last Updated : 16 Nov 2017 11:31 AM

அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம்; அரசின் உத்தரவு சரியானதே: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு சரியானது தான் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில், தமிழக போக்குவரத்து காவல் கூடுதல் டி.ஜி.பி. கடந்த ஆகஸ்டு 24-ம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவில், மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள் தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை செப்டம்பர் 1-ம் தேதி முதல் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது சட்ட விரோதமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசல் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய மோட்டார் வாகன விதி 139-ன் கீழ் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க தேவையில்லை என்றும், அதிகாரிகள் அவற்றை கேட்கும் பட்சத்தில் 15 நாட்களுக்குள் அவற்றை சமர்ப்பித்தால் போதும் என்பதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தமிழக போக்குவரத்து துறை ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள விதிகளின் படியே ஓட்டுநர் உரிமம் அவசியம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், உரிமம் என்றாலே அது அசல் உரிமத்தைதான் குறிக்கும் என்றும்; போக்குவரத்து விதிகளை மீறுவதை தடுக்கவும், அதிகரித்துவரும் விபத்துகளை தவிர்க்கவுமே இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காததால் உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு அறிவுரைகளின்படி உரிமத்தை நிரந்தர ரத்தோ அல்லது தற்காலிக ரத்தோ செய்ய முடியவில்லை என்றும், இந்த உத்தரவால் ஏற்படும் சில சிரமங்களை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள தீர்ப்பில், விபத்துக்களை எண்ணிக்கையை குறைக்கவும், போக்குவரத்து பாதுகாப்புக்கும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, பொதுநலனுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதில் நீதிமன்றம் தலையிட்டால் பொதுநலனுக்கு எதிரானதாக மாறிவிடும் என தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகனங்களை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்தும் நிலையில், ஓட்டுனர் உரிமமே இல்லாமலே பலர் வாகனம் ஓட்டுவதால் தான் விபத்துகள் அதிகரிக்கின்றன. இதை தடுக்கும் விதமாக அசல் ஓட்டுனர் உரிமத்தை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு கொள்கை முடிவினை எடுத்துள்ளதால் அதில் தலையிட முடியாது என்பதால் சம்மேளனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பெரும்பான்மையான மக்களுக்கு பாதிப்பு வரும்போது பொதுநல வழக்கை தாக்கல் செய்யலாம். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், பொதுநல வழக்கு என்பதே தவறாக பயன்படுத்தப்பட்டு, தேவையில்லாமல் தாக்கல் செய்யப்படுகிறது. அதுபோன்ற வழக்குகளால் நீதிமன்ற நேரம் வீணடிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x