ஓசூரில் தக்காளி உற்பத்தியை அதிகரிக்க 15 லட்சம் நாற்றுகளை இலவசமாக வழங்க நடவடிக்கை

தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில், ஓசூர் பகுதியில் மீண்டும் தக்காளி சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆவலப்பள்ளி அருகே சொட்டு நீர்ப் பாசனம் முறையில் நடவு செய்யப்பட்டுள்ள தக்காளி நாற்றுகள்.
தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில், ஓசூர் பகுதியில் மீண்டும் தக்காளி சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆவலப்பள்ளி அருகே சொட்டு நீர்ப் பாசனம் முறையில் நடவு செய்யப்பட்டுள்ள தக்காளி நாற்றுகள்.
Updated on
1 min read

ஓசூர்: ஓசூர் பகுதியில் தக்காளி உற்பத்தியை அதிகரிக்க தோட்டக்கலைத் துறை சார்பில், 100 ஹெக்டேர் பரப்பளவில் நடவு செய்ய 15 லட்சம் தக்காளி நாற்றுகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஓசூர், தேன்கனிக் கோட்டை, தளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, பீன்ஸ், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கர்நாடக, கேரள மாநிலத்துக்கும் விற்பனைக்குச் செல்கின்றன. இப்பகுதியில் கடந்தாண்டு சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

வெயில் மற்றும் நோய் தாக்கம் காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது தக்காளி கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், தக்காளி சாகுபடியில் மீண்டும் விவசாயிகள் ஆர்வம் கட்டி வரும் நிலையில், கடந்த காலங்களில் பசுமைக் குடில்களில் 50 பைசா-வுக்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நாற்று தற்போது, ரூ.1 முதல் ரூ.2 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே, தோட்டக்கலைத் துறை மூலம் மானிய விலையில் நாற்றுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், இலவசமாக நாற்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தோட்டக்கலைத் துறை அலுவலர் கூறியதாவது: ஓசூர் பகுதியில் அதிக வெயில் மற்றும் நோய் தாக்கம் காரணமாகத் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. விலை உயர்ந்துள்ள நிலையில், மீண்டும் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தக்காளி நாற்று தேவை அதிகரித்துள்ளதால், பசுமைக் குடில்களில் நாற்றின் விலை கடந்த காலங்களை விட அதிகரித்துள்ளது.

இதனால், விவசாயிகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவைக் குறைக்கவும், தக்காளி உற்பத்தியை அதிகரிக்கவும் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக நாற்று வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒரு ஹெக்டேருக்கு 15 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும் நிலையில், ஓசூர் பகுதியில் முதல்கட்ட பருவத்துக்கு 100 ஹெக்டேருக்கு தேவையான 15 லட்சம் நாற்றுகள் மற்றும் இயற்கை உரத்தை இலவசமாக வழங்க உள்ளோம். இந்த நாற்றுகள் மூலம் 45 நாட்களில் விளைச்சல் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in