Published : 18 Nov 2017 10:05 AM
Last Updated : 18 Nov 2017 10:05 AM
அமைந்தகரையில் கூவம் ஆற்றின் கரையோரம் இருந்த 387 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி நேற்று தொடங்கியது.
சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் ஆற்றுப்படுகைகளில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கூவம் மற்றும் அடையாற்றின் கரையோரம் 14 ஆயிரத்து 257 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றில், இதுவரை 5 ஆயிரத்து 383 வீடுகள் அகற்றப்பட்டு, அங்கு வசித்து வந்த குடும்பங்களுக்கு பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, அரும்பாக்கம் முத்துமாரியம்மன் நகர், கூவம் ஆற்றின் கரையோரம் இருந்த 387 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் நேற்று தொடங்கியது.
அங்கு வசிக்கும் 281 குடும்பங்களுக்கு நாவலூரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளும், 156 குடும்பங்களுக்கு திருவொற்றியூரில் உள்ள குடியிருப்புகளும் வழங்கப்பட்டு வரு கின்றன.
வாகன ஏற்பாடு
பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு செல்ல மாநகராட்சி சார்பில் வாகன ஏற்பாடு செய்யப்பட்டது. 3 நாட்களுக்கு தேவையான உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, அவர்கள் குடியேறும் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகளை மாநகராட்சி துணை ஆணையர் எம்.கோவிந்தராவ், மத்திய வட்டார துணை ஆணையர் சுபோத்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT