Published : 21 Nov 2017 08:02 PM
Last Updated : 21 Nov 2017 08:02 PM

ஜெயா தொலைக்காட்சியில் துரைமுருகன் பேட்டியா?- அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை அவமானப்படுத்திய துரைமுருகன் பேட்டி ஜெயலலிதா கஷ்டப்பட்டு ஆரம்பித்த ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது. இதிலிருந்தே திமுகவுடன் தினகரன் அணியினர் இணைந்து செயல்படுவது தெளிவாகிவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசத்துடன் பேட்டி அளித்தார்.

இது தொடர்பாக இன்று சென்னை சேத்துப்பட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''ஜெயலலிதா மறைந்த பிறகு நமது எம்ஜிஆர் பத்திரிகை முரசொலி ஆகிவிட்டது. ஜெயா டிவி இன்றைக்கு கலைஞர் டிவியாகி விட்டது. இதுதான் இன்று நடக்கிறது. இல்லாவிட்டால் ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் சேலையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்திய துரைமுருகனை அழைத்து அந்த டிவியில் பேட்டி எடுக்கிறார்கள்.

அப்படி என்றால் இதைவிட வேறு சாட்சி உலகத்திலேயே நிச்சயம் இருக்க முடியாது. திமுகவுடன் இவர்கள் எந்த அளவுக்கு கைகோத்துள்ளார்கள், ஜெயலலிதாவுக்கு விரோதமான காரியங்களை செய்வதிலே முதலாவதாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும்'' என்று அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசத்துடன் கூறினார்.

மைத்ரேயன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ''நான் அதைப் படிக்கவில்லை. எங்களிடம் எந்த வேற்றுமையும் இல்லை. அனைவரும் இணைந்தே செயல்படுகிறோம்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x