Published : 16 Nov 2017 01:02 PM
Last Updated : 16 Nov 2017 01:02 PM
"ஆளுநர் ஆய்வு செய்வதை டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ள வேண்டும் இதில் பரபரப்பான செய்தி எதுவும் இல்லை பரபரப்புக்காக நீங்கள் கேட்காதீர்கள்" என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் சொல்படி தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த அனைத்து திட்டங்களுக்கும் அனுமதி அளித்த தமிழக அரசு, ஜெயலலிதாவின் அரசு அல்ல என்று தினகரன் போன்றோரும், சமூக ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீரென கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுநர் நேரடியாக ஆய்வில் ஈடுபட்டது எதிர்க்கட்சிகள் இடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடும் போக்கு இது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கை இது என சட்டபேரவை எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் குற்றம் சாட்டி வந்த நிலையில் அமைச்சர்கள் அதை நியாயப்படுத்தினர். பாஜக தலைவர்களும் இதை விமர்சிக்க தேவை இல்லை என கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆளுநரின் ஆய்வை நியாயப்படுத்தி பேசினார்.
கோவை நகரம் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டியியாக மாற்றப்பட்ட கோவையில் மத்திய அரசின் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய ஆளுநர் வரலாம். இதில் ஒன்றும் பிரச்சனை இல்லை.
உங்களுக்கு எதாவது பரபரப்பாக செய்தி வேண்டும் என்பதற்காக கேட்கிறீர்கள். இதில் ஒன்றுமே இல்லையே. ஆளுநரின் ஆய்வை 'டேக் இட் ஈஸியாக' எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டுச்சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT