

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 45 நிமிடங்கள் தரிசனம் செய்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் வழியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். இன்று மாலை 4.05 மணியளவில் மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதி கோபுர வாசலுக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் துணை ஆணையர் ச.கிருஷ்ணன் தலைமையில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தலைமை குருக்கள் ஹாலாசிய நாத பட்டர் பூரண கும்பபை மரியாதை அளித்து அழைத்துச் சென்றனர்.
முதலில் சித்தி விநாயகரை தரிசனம் செய்த ஆளுநர், முருகன் சன்னதியில் வழிபட்டார். பின்னர் அம்மன் சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு முக்குறுணி விநாயகர், சுவாமி சன்னதியில் வழிபட்டார். பின்னர் சித்தர் சன்னதி, துர்க்கை அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் கொடி மரத்தை வழிபட்டுவிட்டு கோயிலிலிருந்து வெளியேறினார்.
சுமார் 45 நிமிடங்கள் தரிசனம் செய்து வழிபட்டு கோயிலிருந்து மாலை 4.50 மணியளவில் அம்மன் சன்னதி வாசல் வழியாக வெளியேறி காரில் ஏறி புறப்பட்டார். கோயிலில் சுமார் 45 நிமிடங்கள் தரிசனம் செய்தார். இன்று ஆடி மாத பிறப்பு மற்றும் அமாவாசை தினத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
தலைமை குருக்கள் ஹாலாசிய நாத பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் செய்தனர். கோயில் உள்துறை பேஷ்கார் வீ.பிரபு மற்றும் கோயில் பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.