

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூலை 17)ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய,லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல, வரும் 18 முதல் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 83 டிகிரி ஃபாரன்ஹீட் அளவைஒட்டியிருக்கும். ஜூலை 16-ம் தேதி (நேற்று)காலை பதிவான மழை அளவுகளின்படி, சேலம்மாவட்டம் ஏற்காடு, கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் பார்வூட் ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.