Published : 28 Nov 2017 06:57 PM
Last Updated : 28 Nov 2017 06:57 PM
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து அவரது அணியிலிருந்த மூன்று எம்.பி.க்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவிய நிலையில் இன்று மேலும் இரு எம்.பி.க்கள் தாவினர்.
அதிமுகவில் அடுத்தடுத்து ஏற்படும் பரபரப்பால் எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் அணி தாவி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து அவரது அணியிலிருந்த மூன்று எம்பிக்கள் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என இரண்டானது. தினகரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென தினகரன் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் ஓபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏ, எம்பிக்களுடன் எடப்பாடி அணியுடன் இணைந்தார். இதனால் தினகரன் அணி தனியாகவும், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்து ஒரு அணியாகவும் இயங்கி வந்தனர்.
இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தினகரன் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.இதனால் தினகரன் அணிக்குள்ளேயே புதிதாக ஏற்பட்டுள்ள முட்டல் மோதலும் தற்போது வெளிச்சத்துக்கு வந்தது.
தினகரன் அணியில் இருந்த ராஜ்ய சபா எம்பிக்கள் விஜிலா சத்யானந்த், கோகுல கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் திடீரென நேற்று (திங்கட்கிழமை) எடப்பாடி அணிக்கு தாவினர். மூவரும் நேற்று மதியம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அப்போது அதிமுக அமைச்சர்களும் எடப்பாடியுடன் இருந்தனர்.
இந்நிலையில் இன்று திண்டுக்கல் எம்.பி. உதயகுமார், வேலூர் எம்.பி.செங்குட்டுவன் ஆகிய இரு எம்.பி.க்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், இரட்டை இலை சின்னத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் முதல்வர் அணியுடன் இணைந்ததாக தெரிவித்தனர்.
தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருப்பதன் மூலம் தினகரன் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT