Published : 02 Nov 2017 10:20 AM
Last Updated : 02 Nov 2017 10:20 AM

கொடுங்கையூர் சம்பவம்: சிறுமிகள் வீட்டுக்கு நேரில் சென்று அமைச்சர் ஜெயக்குமார் ஆறுதல்

சென்னைகொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து பலியான சிறுமிகள் வீட்டுக்கு நேரில் சென்ற அமைச்சர் ஜெயக்குமார் சிறுமிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

சிறுமிகளின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

முன்னதாக, நேற்று (புதன்கிழமை) கொடுங்கையூரில் தேங்கிய மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்ததில், அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கொடுங்கையூர் சென்றார். சிறுமிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "பணியில் அலட்சியம் ஏற்க முடியாத ஒன்று. அவ்வாறு பணியில் அலட்சியம் காட்டிய மின்வாரியத்தின் 8 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சாதாரண மழை வேறு கனமழை வேறு. கனமழை பெய்யும்போது தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும். தொடர்ந்து கனமழை பெய்யும்போது மழை நீர் வெளியேறும் ஓட்டம் குறையும். அதன் காரணமாகவே தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது.

ஆனாலும், தேங்கிய நீர் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நாம் தற்போது நிற்கும் பகுதியே தாழ்வான பகுதிதான். இப்பகுதியில், தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதுவே அரசு துரிதமாக செயல்படுவதற்கான ஒரு சாட்சி.

தண்ணீர் தேங்கும்போது அதனை உடனடியாக அகற்றுவதே அரசாங்கத்தின் முக்கிய கடமை. அதை அரசாங்கம் செய்துவருகிறது. தேங்கிய நீரை அகற்றுவதில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துவருகிறது"

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x