துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிப்பு: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

குருமூர்த்தி | கோப்புப்படம்
குருமூர்த்தி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: துக்ளக் வார இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தியை அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவித்து, டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018-ல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய, தற்போதைய ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதருக்கு எதிராக குருமூர்த்தி ட்வீட் செய்தார் என்று, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் சித்தார்த் மிருதுல், கவுரங் காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் ஏற்கெனவே குருமூர்த்தி தாமாக முன்வந்து, நீதித் துறையின் மீது தனக்குமிகுந்த மரியாதை இருப்பதாகவும், எனவே இந்த விஷயத்தை அமைதிப்படுத்துவது முக்கியம்எனவும் கூறி, தனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்திருந்தார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கு 2018-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கிறது. இதற்கு மேலும் இதை நீடிக்க விடமுடியாது. இந்த வழக்கால் சம்பந்தப்பட்ட நீதிபதியின் பெயர்தான் மீண்டும், மீண்டும் அடிபடுகிறது. சில நேரங்களில் நோயைக் குணப்படுத்துவது என்பது, நோயைவிடக் கொடுமையானது’’ என்று கூறி, இந்த வழக்கில் இருந்துகுருமூர்த்தியை விடுவித்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in