Published : 25 Jul 2014 10:00 AM
Last Updated : 25 Jul 2014 10:00 AM
கோவிந்தவாடி அகரம் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவிகளை அப்பகுதி இளைஞர்கள் சிலர் ஈவ்-டீசிங் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமறுத்ததால், காஞ்சிபுரம் வட்டாட்சியர் மற்றும் டி.எஸ்.பி. ஆகியோர் கிராம மக்களிடம் வியாழக்கிழமை பேச்சு நடத்தி சமரசம் செய்தனர். இதுதொடர்பாக கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த கோவிந்த வாடி அகரம் கிராமத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பள்ளிக்கு வரும் மாணவிகளை கேலி செய்துள்ளனர்.
இதைத் தட்டிக் கேட்ட ஆனந்தன் என்பவரை இளைஞர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆனந்தன் பாலுசெட்டி போலீஸில் புகார் அளித்தார். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராமப்பகுதி பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக கூறி, அவர்களை வியாழக்கிழமை பள்ளிக்கு அனுப்பவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் வட்டாட்சியர் மற்றும் டி.எஸ்.பி. பாலச்சந்திரன் ஆகியோர் கோவிந்தவாடி அகரம் பகுதிக்கு சென்று கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், போலீஸார் தினந்தோறும் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் எனவும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து தற்காலிக சமரசம் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT