அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 26 வரை நீ்ட்டிப்பு: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 26 வரை நீ்ட்டிப்பு: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 26-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில், போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அவர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14-ம் தேதி அவரை கைது செய்தது.

அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைத்து, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.

பிறகு, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஜூன் 28-ம் தேதி காணொலி வாயிலாக மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை ஜூலை 12 வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால், 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் விசாரித்து வருகிறார். இதனால், நீதிமன்றக்காவலை நீட்டித்துக் கொள்ளலாம் என அமர்வு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியது.

அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிந்த நிலையில், காணொலி மூலமாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரது நீதிமன்றக் காவலை ஜூலை 26 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in